டைவ் அடிக்கும்போது கையில் பலத்த அடி... துணிந்து எதிரணிக்கு பயத்தை காட்டிய கோலி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 110 ரன்களும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 129 ரன்களும் எடுத்தார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 1 விக்கெட் எடுத்தார்கள்.
இந்நிலையில், இப்போட்டியில் டெம்பா பவுமா அடித்த பந்தை விராட் கோலி டைவ் அடித்து தடுத்தார். அப்போது அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சில நொடிகள் அவர் பந்தை எடுக்காமல் இருந்தார்.
இதைப் பார்த்த டெம்பா பவுமா வேகமாக ரன் ஓட முயற்சி செய்தார். இதைக் கவனித்த விராட் கோலி வேகமாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். இதனால் டெம்பா பவுமா ரன் ஓடாமல் திரும்ப வந்தார். அடிபட்டபோது கூட எதிரணிக்கு கோலி பயத்தை காட்டி இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.