மனவேதனை உச்சியில் நின்றேன்... அப்போ.. பக்கத்துல வந்த 'தோனி' சொன்னாரு பாருங்க.. - மனம் திறந்த சாஹல்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தலைமை பண்பு பற்றி, சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கருத்து தெரிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பிடித்த சாஹல், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவர் தோனி தனக்கு வழங்கிய ஆதரவை மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து சாஹல் பேசியதாவது -
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 போட்டி ஒன்றில், நான் 64 ரன்களை அள்ளிக் கொடுத்தேன். அந்த அணி வீரர் கிளேசன், என்னுடைய பந்தினை நாலாபுறமும் ஓட விட்டுக் கொண்டிருந்தார். மஹி பாய் என்னிடம், மறுமுனையில் இருந்து பந்து வீச சொன்னார்.
நான் அப்படி செய்த போதும், பந்து சிக்சருக்கு சென்றது. பிறகு, தோனி பாய் என் பக்கத்தில் வந்த போது, "இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், நீ எதுவும் செய்ய வேண்டாம். நான் உன்னை பார்க்க மட்டும் தான் வந்தேன்.
இன்று உனது நாளாக அமையவில்லை. நீ மீண்டும் முயற்சி செய்து கொண்டிரு. ஆனால், ஏதும் நடக்கவில்லை. அதிகமாக இதை பற்றி யோசித்துக் கொண்டிருக்காதே. உனது 4 ஓவர்களை முடித்து விட்டு, கூலாக இரு" என்று தோனி பதில் கூறினார். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில், என்னை யாராவது திட்டியிருந்தால், எனது நம்பிக்கையின் அளவு, இன்னும் குறைந்து போயிருக்கும். நான் நொந்து போயிருப்பேன்.
அதே போல, தோனி இன்னொரு விஷயமும் கூறுவார். அனைத்து போட்டிகளிலும், உன்னால் சிறப்பாக செயல்பட முடியாது. சில நேரத்தில், மற்றவர்களும் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று. அது உண்மை தான். அனைத்து நாளும், நமக்கானதாக அமைந்து விடாது. சில நேரம் நாம் மோசமாக பந்து வீசினால், அதனை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், தோனி கூறுவதை போல கடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு சாஹல் பேசினார்.