‘வருத்தப்படாதீங்க... நாங்க இருக்கிறோம்...’ - கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு ஆதரவு தெரிவித்த ராகுல்
உலக கோப்பை டி-20 போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக பந்து வீசாத இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், 'வருத்தப்படாதீங்க... நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்' என்று ஷமிக்கு ராகுல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
உலக கோப்பை டி-20 போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில், பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியை அடைந்தது. இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி, 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கினார்.
இதனையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு ஷமியின் பந்துவீச்சும் முக்கிய காரணம் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ''முகமது ஷமி.. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இந்த மனிதர்களுக்கு யாரும் அன்பை தராததால், அவர்கள் வெறுப்பால் நிரம்பி இருக்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.