பறிபோகும் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி? அதிரடி முடிவை எடுத்த பிசிசிஐ
இந்திய அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தார். 3 பிரிவுகளுக்கும் அவர் கேப்டனாக செயல்படுவது, அவரது பேட்டிங்கிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கேற்றவாறே, அவரது ஆட்டமும் சொதப்பலாகி வருகிறது. இதனால், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனை சந்தித்த விராட் கோலி, டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதற்கிடையே, ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவையே நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னாப்ரிக்க கிரிக்கெட் தொடர் தள்ளிப்போன நிலையில், அதற்கு முன்னதாக, புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, கேப்டனாக இருக்கும் விராட் கோலியை டெஸ்ட்டுக்கு மட்டும் கேப்டனாக தொடர பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.