இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கல... அதுக்குள்ள ‘வேறலெவல்’ சம்பவம் செஞ்சுவிட்டதே இந்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. இதற்கு முன்னாதாக பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இந்த ஏலம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் விளையாட்டு ‘யூனிகார்ன்’ என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பையும் சிஎஸ்கே தாண்டி இருக்கிறது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் இருக்கிறது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இன்னொன்று இந்த ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் என்ற இரு அணிகள் இணைய இருக்கிறது.
அதில் சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ரூ.7090 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதேபோல் அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் ரூ.5625 கோடிக்கு வாங்கி இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளரும், இந்திய சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநருமான என். சீனிவாசன் இதுகுறித்து பேசுகையில், சிஎஸ்கே பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸையும் கடந்து மிஞ்சிவிட்டது. அமெரிக்காவில் தனியார் லீக்குகளின் வரலாற்றைப் பார்த்தால், அது எல்லாவற்றையும் மிஞ்சுவதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் அதிகம்’ என்றார்.