‘யப்பா.. பும்ராலாம் கேப்டன்சிக்கு சரியா இருக்க மாட்டார்...’ - பட்டென பேசிய ரவி சாஸ்திரி

about sports-cricket ravi shastri bumra captaincy
By Nandhini Jan 28, 2022 06:48 AM GMT
Report

பும்ரா கேப்டன்சிக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன்சியை தொடர்ந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, திடீரென டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவே நியமிக்கப்படுவார். ஆனாலும் யாரை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகியோர் பெயர்களை கேப்டன் பதவிக்கு பரிந்துரைத்து வருகிறார்கள் சில முன்னாள் வீரர்கள்.

பேட்ஸ்மேனைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டுமா? ஏன் ஃபாஸ்ட் பவுலரை கேப்டனாக நியமிக்கக்கூடாதா? கபில் தேவ் ஃபாஸ்ட் பவுலர் தான். அவர் சிறந்த கேப்டனாக திகழவில்லையா? எனவே பும்ராவை துணை கேப்டனாக நியமித்து, அவரை அடுத்த கேப்டனாக இந்திய அணி உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது -

கண்டிப்பாக பும்ராவை கேப்டனாக்குவது பற்றி நான் யோசித்ததே கிடையாது. இந்திய அணியை பொறுத்தமட்டில் ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருப்பது மிகவும் கடினம். ஒரு ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருக்க வேண்டுமென்றால் அவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும்.

பாப் வில்லிஸ் மாதிரியான வீரராக இருக்கவேண்டும். அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், போட்டிகளை ஜெயிக்கவே பார்ப்பார். ஒரு ஃபாஸ்ட் பவுலர் அரிதினும் அரிதாகத்தான் நீண்டகாலம் ஆடுவார். கபில் தேவ், இம்ரான் கான், சர் கார்ஃபீல்ட் மாதிரியான ஆல்ரவுண்டர்களாக இருந்தால் மட்டுமே கேப்டனாக செயல்பட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

‘யப்பா.. பும்ராலாம் கேப்டன்சிக்கு சரியா இருக்க மாட்டார்...’ - பட்டென பேசிய ரவி சாஸ்திரி | Sports Cricket Bumra Captaincy About Ravi Shastri