‘நான் இறப்பதற்குள் நீ வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு திரும்வி வருவாய்...’ - அஸ்வின் உருக்கமான பதிவு

aswin sports-cricket
By Nandhini Dec 22, 2021 07:17 AM GMT
Report

“நான் இறப்பதற்குள் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு நீ திரும்புவாய்” என்று என் தந்தை கூறியதை உருக்கமாக மனம் திறந்து பேசினார் அஸ்வின்.

2018-ம் ஆண்டிலிருந்து 2020 வரை கிரிக்கெட்டை விட்டு சென்று விடலாம் என்று பல்வேறு காரணங்களுக்காக தன் மனதில் நிறைய தோன்றியது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது, அஸ்வின் காயங்களினால் பெரிய அளவில் அவதிப்பட்டார், முழங்கால் காயம், தோள்பட்டைக் காயம், இடுப்பில் வலி போன்றவற்றினால் சில தொடர்களில் உட்கார நேரிட்டது. அஸ்வின் இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர்.

இவர் அதிக தொடர் நாயகன் விருதுகளை டெஸ்ட் தொடர்களில் பெற்றுள்ளார். முழங்கால் மூட்டு தசைநார்களில் சிக்கல் ஏற்பட்டு நடந்தாலே வலிக்கும் patellar tendonitis என்பதால் பாதிக்கப்பட்டிருந்தார் அஸ்வின். இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கிரிக்கெட் மந்த்லிக்கு அஸ்வின் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது -

“2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் கிரிக்கெட்டை விட்டே ஓய்வு பெற்று விடலாம் என்ற அளவுக்கு நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நிறைய முயற்சிகள் செய்தும் எதுவும் சரிவரவில்லை.

நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேனோ அந்த அளவுக்கு மீளுவது தூரம் சென்று கொண்டே இருந்தது. அதாவது காயம் என்றால் சாதாரணமல்ல, 6 பந்து வீசி விட்டு மூச்சுக்காக மிகவும் நான் திணறுவேன். வலி எல்லா இடங்களிலும் வலி, அதை நான் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

முழங்கால் வலி பின்னி எடுத்து விடும். பந்து வீசும்போது குதிப்பதை குறைத்து விடுவேன். அப்படி ஜம்ப்பை குறைத்தால் கையில் தோள் மற்றும் முதுகில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டி வரும்.

அப்போது இடுப்பு மற்றும் இடுப்பும் தொடையும் சேரும் பகுதியில் வலி பின்னி எடுத்து விடும். அதாவது போதும் பவுலிங் போட்டது போதும் என்ற எண்ணமே வந்து விடும். நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.

என்னை பிராண்ட் பண்ணுங்கள். அணியை விட்டுத் தூக்கி விடுங்கள். ஆனால், என் நோக்கம், என் போராடும் நோக்கம் ஆகியவற்றை சந்தேகித்தால் அது என்னை ஆழமாகக் காயப்படுத்தி விடும். நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்து விட்டேன்.

என் காயங்கள் குறித்து யாரும் மதிக்கவே கிடையாது. காயமடைந்த எத்தனையோ பேரை ஆதரிக்கும் போது என்னை ஏன் அந்தத் தருணத்தில் யாரும் ஆதரிக்கவில்லை? நான் ஒன்றும் குறைவாக அணிக்காகச் செய்து விடவே இல்லையே. நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளேன்.

ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை என்பது என்னுடைய வருத்தம். நான் பொதுவாக யாருடைய உதவியையும் ஆதரவையும் எதிர்பார்ப்பவன் கிடையாது. கருணையையும் நான் எதிர்பார்ப்பவன் கிடையாது. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை என்று நினைத்தேன். அதுதான் நடக்கவில்லை.

2018ம் ஆண்டு, இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அதே ஆண்டில் பின் பகுதியில் ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் டெஸ்ட்டில், சிட்னிக்கு முன்னும் பின்னும் நான் விரக்தி மனநிலையில்தான் இருந்தேன், என் மனைவியிடம் தான் பேசுவேன்.

ஆனால் என் தந்தை தீவிரமாக இருந்தார். நான் இறப்பதற்குள் மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு நீ திரும்புவாய்” என்று என் தந்தை திட்டவட்டமாக நம்பினார். அவருக்கு அது மிகவும் பெர்சனலான விஷயமாகி விட்டது.

இவ்வாறு தன்னுடைய மனவேதனையை வெளிப்படுத்தினார் அஸ்வின்.