இந்திய ODI அணி அறிவிப்பு - ஐபிஎல் ஸ்டாருக்கு அணியில் வாய்ப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

sports-cricket Inida ODI
By Nandhini Jan 27, 2022 05:58 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது.

அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபாரமாக விளையாடி வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள், மிடில் ஆர்டர் ஆகிய பிரச்னைகள் உள்ள நிலையில், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. காயத்திலிருந்து மீண்டும் முழு ஃபிட்னெஸுடன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிவிட்டார்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டன் கேஎல் ராகுல், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். 3ம் வரிசையில் விராட் கோலி.

மிடில் ஆர்டர் வீரர்களாக சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், தீபக் ஹூடாவிற்கு முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் இன்னும் முழு ஃபிட்னெஸை அடையாததால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இடம்மில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய அஷ்வின் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

கடைசியாக 2019ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையில் இணைந்து ஆடிய குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி மீண்டும் ஒருசேர ஆட இருக்கிறது. அந்த உலக கோப்பைக்கு பின், இருவரும் ஒன்றாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்கள். சாஹல் மட்டும் இந்திய அணியில் ஆடிவந்த நிலையில், மீண்டும் குல்தீப்பிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

மேலும் ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். பும்ரா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன், ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசி, 15வது சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராக திகழ்ந்த ஆவேஷ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.