காயம் காரணமாக கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விலகல் - உறுதி செய்த கேப்டன்- சோகத்தில் ரசிகர்கள்
ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியிலிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகி உள்ளார். நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன.
முதல் 3 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கடுமையாக போராடி டிரா செய்துள்ளது.
இப்போட்டியின் முதல் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலிய அணி நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றார். 2வது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் கிராலி மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
மறுமுனையில் ஹமீத் வழக்கம்போல சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கிராலி அதிரடியாக விளையாடி 77 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். 100 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறின. பின்னர் ஜோ ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவர்களும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜோ ரூட் 24 ரன்களுக்கும், ஸ்டோக்ஸ் 60 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 200 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பெருத்த பின்னடைவை சந்தித்தது இங்கிலாந்து அணி. இதனை அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
5ம் நாள் முடிவதற்கு இன்னும் 10 ஓவர்கள் மீதமிருக்க, இங்கிலாந்து அணிக்கு 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட 8 ஓவர்கள் வரை பிராட் மற்றும் லீச் இருவரும் தாக்குப்பிடித்தார்கள். லீச், ஸ்மித் பந்தில் ஆட்டமிழந்தார்கள்.
இன்னும் 12 பந்துகளே மீதமிருக்க, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. அப்போது உள்ளே வந்த ஆண்டர்சன் நன்றாக தாக்குப்பிடித்து விக்கெட் விட்டுக் கொடுக்காமல் இருந்தார் இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்று டிராவில் முடிந்தது.
2வது இன்னிங்சில், விரலில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஜோஸ் பட்லர், காயம் தீவிரமாக இருப்பதால் 5வது போட்டியில் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கள். இதனால் 5வது போட்டியிலிருந்து விலகி நாடு திரும்புகிறார் ஜோஸ் பட்லர்.
இதுகுறித்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘மிக முக்கியமான பேட்ஸ்மேன் அணியில் இல்லை என்பது கூடுதல் பின்னடைவாக உள்ளது. இருப்பினும் மற்ற வீரர்கள் அணியில் உள்ளனர். தோல்வியை தழுவி வருவதால், எங்களிடம் போதிய திட்டம் மற்றும் நோக்கம் கிடையாது என நினைத்துவிட வேண்டாம். அன்றைய நாள் எங்களுக்கு சரியானதாக அமையவே இல்லை. 5வது போட்டியில் நிச்சயம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என நினைக்கிறேன்” என்றார்.