பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று

sports-cricket
By Nandhini Dec 16, 2021 07:41 AM GMT
Report

மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் 9ம் தேதி விமானம் மூலம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றடைந்தனர்.

2018-ம் ஆண்டுக்கு பின்பு, மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுதான் முதல்முறை. 3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் தொடரை கடைசி நேரத்தில் முறித்து கொண்டது. இதனையடுத்து, களம் இறங்காமல் நாடு திரும்பியது.

இதனால் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் தாங்கள் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

2 அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி கராச்சியில் கடந்த 13ம் தேதி நடந்தது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஷாய் ஹோப், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹொசைன், ஆல்ரவுண்டர் ஜஸ்டின் க்ரீவ்ஸ், உதவி பயிற்சியாளர் ரோடி எஸ்ட்விக் மற்றும் அணி மருத்துவர் டாக்டர் அக்ஷய் மான்சிங் ஆகிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 வீரர்களும் நடக்க இருக்கும் போட்டிகளிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும், தொற்று பாதித்த 5 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ அதிகாரிகளின் கண்கானிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.