எனக்கும், ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது - மனம் திறந்த விராட் கோலி

sports-cricket
By Nandhini Dec 16, 2021 05:44 AM GMT
Report

ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நீக்கியது. கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை கேப்டனாக பிசிசிஐ நியமித்து உத்தரவிட்டது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் முதல் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு நேர ஒருநாள் மற்றும் 20 வது ஓவர் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவர் என்று அறிவிப்பை வெளியானது.

இதனையடுத்து, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி தானாக விலக வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.

இதற்காக கோலிக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் விலக மறுத்ததால், நீக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியானது. ஒரு நாள் அணியின் கேப்டன்சியில் தொடர்வதாக விராட் கோலி தெரிவித்த போதும், பிசிசிஐ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளியாயின.

‘ ரோகித் சர்மா கேப்டனாக செயல்படபோகும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்றும், விராட் கோலி கேப்டனாக செயல்படும் டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா காயம் காரணமாக பங்கேற்கமாட்டார் என்றும் தகவல் வெளியாயின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலி மவுனம் கலைத்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது -

"நான் நிச்சயம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுவேன். எப்போதும் இந்திய அணிக்காக நான் இருப்பேன். கேப்டன்சி பொறுப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்துக் கொண்டிருக்கிறது.

அந்த தகவல்கள் எல்லாம் முற்றிலும் பொய். எனக்கும், ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக இது பற்றி விளக்கம் அளித்து ஓய்ந்து விட்டேன். டெஸ்ட் அணி தேர்வு செய்த போது, என்னிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

நான் அப்போதே சம்மதம் தெரிவித்து விட்டேன். அதன் பிறகும் கூட பிசிசிஐ அதிகாரிகள் உடன் நீண்ட ஆலோசனை நடத்தினேன். எனவே அந்த விவகாரம் அப்போதே முடிந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.