சதம் அடிக்காததைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது - புஜாரா பளிச் பேட்டி
சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்திருந்தால், அது பேட்டிங் திறனை பாதிக்கும்' என்று புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை கான்பூரில் தொடங்க இருக்கிறது. இப்போட்டியில் விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகி உள்ளனர்.
இந்நிலையில், ரஹானே தற்காலிக கேப்டனாக செயல்படுகிறார். ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் டெஸ்ட் சீனியர்களான புஜாரா, ரஹானே இருக்கிறார்கள்.
இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 18 சதங்கள் விளாசியிருக்கும் புஜாரா, பல இன்னிங்ஸ்களில் அணியின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளன்ர். ஆனால் புஜாரா கடைசியாக 2019 ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார்.
அதற்கு பிறகு அவர் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதிகளவில் பந்துகளை எதிர்நோக்கி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
இதனையடுத்து, சதம் அடிக்காதது குறித்து புஜாரா செய்தியாளர்கள் பேட்டியில் பேசுகையில், ''நான் 50, 80, 90 ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறேன். எப்போதும் போல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.
சதம் அடிக்கவில்லை என்று எனக்கும் தெரியும். ஆனால் அதை பற்றி ஒருபோதும் கவலைப்படவே கிடையாது. அணியின் ஸ்கோரை உயர்த்துவதில்தான் என் எண்ணம் உள்ளது. அப்படி விளையாடினால் நிச்சயமாக சதமும் அடிக்க வாய்ப்பு இருக்கிறது.
எனது டெக்னிக்கில் எந்த மாற்றமும் நான் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவே விளையாட ஆசைப்படுகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதித்து விடும். கொஞ்சம் பயமின்றி இங்கிலாந்தில் விளையாடினேன். அதுபோன்று, மனநிலையில் தான் இந்த தொடரிலும் இருக்கிறேன்'' என்றார்.