வரலாற்றில் இடம் பிடித்த ரோஹித் சர்மா - புதிய சாதனை

By Nandhini Nov 22, 2021 07:16 AM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியின் மூலமான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடியது. இத்தொடரில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி, இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் 3-வது டி.20 போட்டி நேற்று நடந்தது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தீபக் சாஹர் 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 17.2 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. அதே போல் 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா, இந்த போட்டியின் மூலம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார். இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் விளாசிய போது டி.20 கிரிக்கெட்டில் தனது 150வது சிக்ஸரை பதிவு செய்துள்ளார் ரோஹித் சர்மா.

இதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய 2வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார். அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 169 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். கிரிஸ் கெய்ல் 124 சிக்ஸர்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.