டி20 உலகக் கோப்பையில் விறுவிறுப்பு : இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை - ரசிகர்கள் ஆவல்
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடக்க இருக்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா பலமுறை வென்றுள்ளது. இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாகிஸ்தானை எளிதாக கருத இயலாது என்றார்.
இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில வீரர்களின் உடல்தகுதியில் பின்னடைவு அடைந்துள்ள நிலையில், பந்து வீச்சுக்கு ஹர்திக் பாண்ட்யா தயாராகி வருகிறார். டி20 போட்டிகளே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்துபவையாக மாறியுள்ளது.
இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே இன்று நடக்கும் போட்டி உச்சகட்ட பரபரப்பாக இருக்கும். இப்போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.