இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் உடல்நிலை கவலைக்கிடம் - ‘அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்’ - ஜெயசூர்யா வேண்டுகோள்
இலங்கையின் முன்னாள் முதல் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பந்துல வர்ணபுரா (68) குணமடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் முதல் டெஸ்ட் கேப்டன் பந்துல வர்ணபுரா கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானது. அவரின் வலது காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பந்துல வர்ணபுரா சம்மதிக்கவில்லை.
அகற்றியே ஆகவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்த பந்துல வர்ணபுரா, இலங்கை அணியின் பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் பந்துல வர்ணபுரா விரைவில் நலம் பெற வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.