அவர்கள் இல்லாமல் போனதுதான் தோல்விக்கு காரணம்: கேப்டன் தோனி வருத்தம்

sports-cricket
By Nandhini Oct 03, 2021 03:06 AM GMT
Report

சிறப்பாக பந்துவீசக்கூடிய அனுபவ வீரர்கள் நேற்றைய போட்டியில் ஆடாததால், தோல்வியை சந்தித்தோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு ஆடியது. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் கடைசிவரை நின்று சத மடித்தார். பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிக் கொண்டது.

போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியதாவது -

டாஸை இழந்தது மோசமாக அமைந்துவிட்டது. 190 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். பனியின் தாக்கம் இருந்ததால், பந்து சீரான வேகத்தில் பேட்டிற்கு வரத் தொடங்கியது. அதை சரியாக பயன்படுத்தி இருந்திருக்க வேண்டும். அதைத்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் செய்தார்கள். அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.

பவர்பிளே-யிலேயே போட்டியை அவர்கள் தங்கள் பக்கம் கொண்டு சென்று விட்டார்கள். ஸ்பின்னர்கள் பந்து வீசியபோது, பிட்ச் கொஞ்சம் கடினமாக இருந்திருந்தது. பிறகு ஒத்துழைத்தது. அதை ருதுராஜ் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோர் எதுவென்று, பந்துகளை எதிர்கொள்ளும்போதே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பேட்ஸ் மேன்கள் விளையாட வேண்டும். அவர்கள் பிட்சை சரியாகக் கணித்தார்கள்.

எங்கள் அணியில் தீபக் சாஹர், பிராவோ இடம் பெறவில்லை. இருந்திருந்தால் நிலையை சரியாக கணித்து, சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். அவர்கள் இல்லாதது எங்களுக்கு இழப்புதான். இந்தப் போட்டியை மறந்துவிட வேண்டும். அதே நேரம் இதிலிருந்து பாடமும் கற்றுகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.