பாலியல் வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் மீது போலீசார் வழக்குப்பதிவு - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான பாலியல் புகார் பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
14 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் யாஷிர் ஷா. இவர் லெக் ஸ்பின்னராக 2014ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 46 டெஸ்ட்களில் 235 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
மிக குறைந்த போட்டிகளில் விரைவாக 50, 100, 200 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனையும், பல்வேறு சாதனைகளையும் யாசிர் படைத்துள்ளார்.
இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதாகும் சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் சிறுமி கூறியிருப்பதாவது -
“யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார். ஃபர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவுக்கு, வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார்.
மேலும் தனக்கு சிறு வயது பெண்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து உயர் அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. எனக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது.
உயர் அதிகாரிகளையும் நன்றாக தெரியும். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார்.
யாசிர் ஷாவும், அவரின் நண்பர் ஃபர்ஹானும் சிறுமிகளை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோக்களாக எடுத்து வைத்து மிரட்டி வருகிறார்கள். யாசிர் அவரின் நண்பர் செய்த இக்கொடூர செயலை மறைத்து அவருக்கு ஆதரவாக உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அச்சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
போலீசில் புகார் அளித்த பின்பு, யாசிர் ஷா தன்னை தொடர்பு கொண்டு உனக்கு ஒரு ஃபிளாட் வீடும், 18 அடுத்த ஆண்டுகளுக்கு மாதம் மாதம் பணமும் தருவதாக கூறினார் என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீதான பாலியல் புகார் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.