இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? ரசிகர்கள் ஆர்வம்
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி இருந்து வருகிறார். இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, இந்தியக் கிரிக்கெட் அணியில் விளையாடி வந்த அனில் கும்ப்ளே அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ வட்டாரம் கூறி வருகின்றன. ஏற்கெனவே 2016 - 17ம் ஆண்டில் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே, பதவியேற்ற ஒரு ஆண்டிற்குள் விராட் கோலியுடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக பதவி விலகிக் கொண்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ஐதராபாத் அணியின் ஆலோசகருமான வி.வி.எஸ்.லட்சுமணும் பயிற்சியாளர் பதவிக்கான பந்தய களத்தில் உள்ளார். 134 டெஸ்ட், 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வி.வி.எஸ்.லட்சுமண் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி தான் ஓய்வு பெறுவது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியதாவது-
இந்திய அணியின் பயிற்சியாளராக நான் விரும்பியதை எல்லாம் சாதித்து விட்டதாக நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் நமது அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தோம். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை டெஸ்ட் போட்டியில் அவர்களது இடத்திலேயே சாய்த்ததை உச்சபட்ச சாதனையாகவே நான் பார்க்கிறேன்.
இதில் லண்டன் லார்ட்ஸ், ஓவலில் கண்ட டெஸ்ட் வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பையை வென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் அணியினர் முழுதிறமையை வெளிப்படுத்தினால் உலக கோப்பையை வெல்ல முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.