கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகல்? - பிசிசிஐ அளித்த விளக்கம்!
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பிசிசிஐ விளக்கம் அளித்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார்.
இதனால், அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது. அவர் மீதுள்ள கூடுதல் பொறுப்புகளினால் தான் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் கோலி சதமடிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும், கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடருவார் என்றும் பிசிசிஐ வட்டார தகவல் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக கோலி தொடர்ந்து செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து, கோலி குறித்த வதந்திக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.