டோக்கியோ ஒலிம்பிக் - பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ1. கோடி பரிசு: மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் அசத்தல் அறிவிப்பு!
ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.1 கோடி பரிசு என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் அறிவித்திருக்கிறார்.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிற்து. பளுத்தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் மீராபாய் சானு. இந்நிலையில், தனது ஒலிம்பிக் பதக்கத்தை நாட்டுக்காக சமர்ப்பிப்பதாக மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
என்னுடைய கனவு பலித்துள்ளது. இந்த பதக்கத்தை என் நாட்டுக்காக சமர்ப்பிக்கிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்த கோடான கோடி இந்திய மக்களுக்கும், அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக எனது குடும்பமும், எனது அம்மாவும் பல தியாகங்களை செய்திருக்கிறார்கள். அரசு, விளையாட்டு அமைச்சகம் என எனது பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மா சாருக்கு ஸ்பெஷல் நன்றி
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுவுக்கு, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் வாழ்த்து தெரிவித்து, மகத்தான சாதனை புரிந்ததற்காக அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.