பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மனைவி உருக்கம்

sports
By Nandhini May 01, 2021 08:09 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

தற்போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தில் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து அஸ்வினியின் மனைவி ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “ஒரே வாரத்தில் எங்கள் குடும்பத்தில் 6 பெரியவர்களுக்கும் 4 சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. நாங்கள் அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் சிகிச்சையில் இருந்தோம். இந்த வாரம் எங்களுக்கு மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.

அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒன்றே கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும். கொரோனா வந்தால் உடலளவில் நாம் சீக்கிரமாகத் தேறிவிட்டாலும் மனதளவில் சகஜ நிலைக்கு திரும்ப நேரம் எடுக்கிறது. இந்த எட்டு நாட்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்தது. உதவிச் செய்ய அனைவரும் இந்தார்கள். ஆனால் யாரும் நம்முடன் இருக்க முடியாது. கொரோனா மிகக் கடுமையான தனிமைப்படுத்தல் நோயாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் குடும்பத்தாருடன் இருப்பது அவசியம் என்பதால் விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.