பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த தகவலை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்,
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 11ஆம் தேதி முதல் 13ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இதற்காக மாதவரம் பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம்((MEPZ), தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளிள் புறப்படும் இடங்களாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.