“அப்பாவோட கடைசி ஆசை அது தான்..ரொம்பவே ஆசப்பட்டு கேட்டாரு “ - மனம் திறந்த எஸ்.பி.பி.சரண்
தனது அப்பாவின் கடைசி ஆசையை குறித்து மனம் திறந்தார் எஸ்.பி.பி.சரண்.
சென்னை தியாகராய நகரில் ஆந்திர சமூக மற்றும் கலை சங்க அரங்கத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட பின்னணி பாடகருமான எஸ்.பி.பி. சரண், இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
எஸ்.பி.பியின் பாடல்களை பாடிய அவரின் குடும்பத்தினர், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி. சரண் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் அப்பாவின் கடைசி ஆசை என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சரண்,
“அப்பா முகமத் ரஃபியின் ( இந்தி திரையுலகின் பிரபல பின்னணி பாடகர்) மிக பெரிய பக்தர். ஒரு முறை ரஃபி அவர்களின் குடும்பத்தை சந்திக்க நாங்கள் மும்பை சென்றிருந்தோம் அப்போது ரஃபி உபயோகித்த பழைய ஃபியாட் வகை கார் ஒன்று துருப்பிடித்த நிலையில் வெளியில் நிறுத்திவைக்கப்படிருந்தது.
அதை தனக்கு கொடுங்கள் முகமது ரஃபியின் பக்தனாக நான் அதை பழுது பார்த்து புதிபித்து பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என அவர்களிடம் கேட்டார்.
அவர்கள் குடும்பத்தோடு ஆலோசித்து சுமார் 2 வருடங்கள் கழித்து தர முன்வந்தனர். இதை கேட்டு அப்பா மிகவும் சந்தோஷமடைந்தார். ஆனால் அதற்குள் அப்பா மறைந்துவிட்டார்.
அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது அந்த காரை நான் பழுது பார்து தயார் செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.