வடகொரியாவுக்கு ஆதரவளிக்க தயார்.. ஆனால் தென்கொரியா போடும் கண்டிஷன்
வடகொரியாவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்லும் நிபந்தனையை கேட்க வேண்டும் என புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நாட்டின் உயர்மட்ட வழக்கறிஞராக இருந்த யூன் சுக் இயோல் குறுகிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றார். இதனைத்தொடந்து இன்று அவரின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய புதிய அதிபர் யூன் சுக் இயோல் வடகொரியாவுக்கு ஆதரவு அளிக்க தயார் என தெரிவித்தார்.
ஆனால் வடகொரியாவின் ஆயுதத் திட்டங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அணு ஆயுதங்களை முழுவதுமாக வடகொரியா கைவிட்டால் வடகொரியாவுக்கு ஆதரவு அளிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் வடகொரியாவின் பொருளாதாரத்தை பெரிதும் வலுப்படுத்தும் துணிச்சலான திட்டத்தை முன்வைக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதன்மூலம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும் என்று யூன் கூறினார்.
அதேசமயம் வடகொரியா தாக்குதலுக்கு முற்பட்டால் தேவைப்பட்டால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். தென் கொரியா வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு சவால்களை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது.ஒருமுறம் வடகொரியா புதிய ஆயுதங்களை சோதித்து வருகிறது. மற்றொரு பக்கம் தென் கொரியாவில் கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட பணவீக்கம் ஆகிய இரண்டும் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள யூனுக்கு முக்கிய சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கது