இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினை? விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பும் சவுரவ் கங்குலி
விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டி20 போட்டிகளில் இருந்து தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, தொடர்ந்து அவரைச்சுற்றி சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது அவசியமற்றது என முடிவுசெய்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியது.
நீக்குவதற்கு முன்பாக பிசிசிஐ தரப்பு என்னிடம் எந்தவித ஆலோசனைகளிலும் ஈடுபடவில்லை.
முறையான அறிவிப்பும் கொடுக்கவில்லை என விராட் கோலி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மற்றும் இணையதள நேரலையில் உண்மையை உடைத்துள்ளார்.
விராட் கோலியை நீக்கம் செய்வதற்கு முன்பாக அவரிடம் அனைத்தையும் கூறி விட்டோமென்று கங்குலி தெரிவித்தார். ஆனால், பிசிசிஐ தரப்பு பொய் சொல்லி விட்டதா? என்று பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ‘டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கு முன்பாக விராட் கோலியிடம் நான் நேரடியாக பேசினேன். மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
ஆனால் விராட் கோலி தான் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டார்.
எங்களது திட்டப்படி, ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பையும் ரோகித்சர்மா கொடுத்துவிட்டோம். இவை அனைத்தையும் தெரிந்த விராட் கோலி முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தவறாக கூறினார்.
இது முற்றிலும் தவறு.” என்றார்.
மேலும், இதற்கு விளக்கம் அளிக்கக்கோரி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் தொடர் முடிவுற்ற உடன் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் அவர் ராஜினாமா செய்தார்.
இதற்கான அறிவிப்பையும் விராட்கோலி நேரடியாக கங்குலியிடம் கூறவில்லை. செயலாளரிடம் அறிவித்துவிட்டு சமூக வலை தளத்திலும் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாகவும் விராட் கோலி மீது கங்குலி சற்று அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்க உரை கேட்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.