பிக்பாஸ் பிரபலம் சோனாலி போகட் மரணம் - பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..இருவர் அதிரடி கைது
சோனாலி போகட்
அரியானா மாநிலத்தில் டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் சோனாலி போகட் (41). இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நெறியாளர், சீரியல் நடிகை வலம் வந்தார். இருந்தாலும், டிக்டாக் செயலி மூலம்தான் அதிகளவிலான ரசிகர்களை இவர் பெற்றார். டிக்டாக் பிரபலத்தால், கடந்த 2019ம் ஆண்டு அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தது.
ஆதம்பூர் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் குல்தீப் பிஷ்னோய்க்கு எதிராக போகட் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருந்தாலும், கட்சி பணிகளில் சோனாலி ஈடுபட்டு வந்தார். பிக் பாஸ் 14 வது நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
மரணத்தில் திடீர் திருப்பம்
2 நாட்கள் படப்பிடிப்புக்காக சோனாலி கோவா சென்றிருந்தார். இவர் கடந்த 22ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின. சோனாலியின் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கோவா சென்றடைந்தனர்.
சகோதரர் பரபரப்பு புகார்
இது குறித்து சகோதரர் ரிங்கு டாகா கூறுகையில், நடிகை சோனாலி மாரடைப்பால் இறக்கவில்லை, அவரை பலாத்காரம் செய்து கூட்டாளிகள் கொலை செய்துள்ளதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
சோனாலி மரணமடைவதற்கு சிறிது முன்தான் என் அம்மாவிடம் பேசினாள். அப்போது ரொம்ப கலக்கத்துடன் பேசினாள். அவளுடன் இருந்த 2 கூட்டாளிகள் மீது அம்மாவிடம் புகார் கூறினாள்.
சோனாலி மாரடைப்பால் இறக்கவில்லை. அவள் கொலை செய்யப்பட்டுள்ளாள். சோனாலியின் பிரேத பரிசோதனையை டெல்லி அல்லது ஜெய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்துவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
இந்நிலையில், கோவா மருத்துவ கல்லூரியில் நடந்த சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை முடிவில், சோனாலி மாரடைப்பால் இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சோனாலியின் உடலில் பல காயங்கள் இருப்பதாகவும், அவரை பலவந்தப்படுத்தி இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
இருவரை கைது செய்த போலீசார்
பிரேத பரிசோதனை அறிக்கை தகவல் வந்ததையடுத்து, இது ஒரு படுகொலை என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதீர் சக்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே சோனாலியன் கணவர் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில், தற்போது சோனாலியின் மர்ம மரணமும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.