தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள் - முதலமைச்சர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கலாமா என சிலர் சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பெரம்பலூரை சேர்ந்த 36,691 பயனாளிகளுக்கு ரூ.78 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் ரூ.32.94 கோடி மதிப்பீட்டில் 57 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். ரூ.252 கோடி மதிப்பீட்டில் 74 முடிவுற்ற திட்டப் பணிகள் தொடங்கி வைத்தார்.
புதிய தொல்லியியல் அருங்காட்சியகம்
இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதுபோன்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதை படிம பூங்கா அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்துக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட பின் பேசிய முதலமைச்சர், அரியலூரில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாக காணப்படுகின்றன.
அரியலூர் போன்றே பெரம்பலூர் மாவட்டத்திலும் வரலாற்று சிறப்பிக்க அம்சங்கள் உள்ளன. அரியலூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு கனிம வளங்கள் அதிகமுள்ளன. கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு என தொல்லியியல் பொக்கிஷங்கள் அரியலூரில் நிறைந்துள்ளன.
முதலமைச்சர் குற்றச்சாட்டு
தொல்லியியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியே உருவாக்கி உள்ளோம் என்றும் கூறினார். ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என விமர்சித்தார்.
கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள்.
மேலும், விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷத்தனம் கூடாது. விமர்சிப்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும்.
அதிமுகவினர் புகார்கள் கொடுப்பதை பார்த்து மக்கள் ஏளனமாக சிரிக்கிறார்கள். தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள் என குற்றசாட்டினார்.