ராஜாவிடம் சாதி உணர்வு துளியும் இல்லை- அட்லாண்டா சர்ச்சையில் சாலமன் பாப்பையா
அமெரிக்காவின் அட்லாண்டா தமிழ்ச் சங்க அழைப்பின் பேரில் பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு தமிழ் உணவு சமைத்த பெண்களிடம் ராஜா அவர்கள் எந்த ஊர் என்று கேட்டதுடன், சாதி குறித்து கேட்டதாக தொழில்முனைவோர் கார்த்திகேயன் ஃபாஸ்டுரா தனது முகநூலில் பதிவு செய்தார்.
இந்தப் பேச்சால் தனது தங்கை மனமுடைந்து அழுததாகவும் அவர் குறிப்பிட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை ராஜா மறுத்து வீடியோ வெளியிட்டார். அதில், "உணவு மிகவும் சுவையாக இருந்ததால் அது செட்டிநாடு உணவா என்று கேட்டேன். நான் யாரிடமும் சாதி கேட்கவில்லை. தமிழன் என்பதே எனக்கு பெருமை" என்று விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா கூறுகையில், "ராஜா 45 ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் எனக்கு தெரியும். அவருக்கு சாதி உணர்வு இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்" என்றார்.
தமிழகத்தின் மூத்த பேச்சாளரான சாலமன் பாப்பையாவே முன்வந்து விளக்கம் அளித்துள்ளதால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.