சமூக நீதி, சமதர்ம சமுதாயம் அமைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
சமூக நீதி, சமதர்ம சமுதாயம் அமைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
மாநாடு
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 2வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது "சமூக நீதி, சமதர்ம சமுதாயம் அமைக்கவே திராவிட இயக்கம் தோன்றியது.
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டே திமுக செயல்படுகிறது. எங்கெல்லாம் அடிமைத்தனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சமூக நீதி மருந்தாக இருக்கும். தமிழகத்தை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை பின்பற்றி வருகின்றன.
தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது. சமூக நீதியை பாஜக முறையாக அமல்படுத்துவது இல்லை.
மு.க.ஸ்டாலின் பேச்சு
கடந்த 30 ஆண்டுகளில் மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% விழுக்காடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பாஜக அரசு விரும்பவில்லை.
எனவே தான் பாஜக அரசுக்கு சமூக நீதிக்கு எதிராக உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், தீடீரென இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி வழங்கிய வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்தபோது இதே ஆர்.எஸ்.எஸ். எங்கே போனது?.
அன்றைக்கு ஆட்சியை கவிழ்த்த பாஜகவை பின்னால் இருந்து இயக்கியது இதே ஆர்.எஸ்.எஸ்தான். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் விளிம்புநிலை மக்களை ஏமாற்ற மோகன் பகவத் இப்படி சொல்கிறாரே தவிர உள்ளார்ந்த ஈடுபாட்டில் சொல்லவில்லை" என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.