சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி - வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு
ஜாமீன் கிடைத்ததையடுத்து செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியே வந்தார்.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உச்சநீதி மன்றம் விதித்த நிபந்தனையில் ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.
ஜாமீன்
இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக செந்தில் பாலாஜியின் உறவினர்கள் இருவர் பிணை உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் வந்தனர்.
ஆனால் விசாரணை அதிகாரி பிணை உத்திரவாதம் அளிக்க வேண்டுமா நீதிமன்றத்தில் பிணை உத்திரவாதம் அளிக்க வேண்டுமா என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடவில்லை, எனவே விசாரணை அதிகாரி நீதிமன்றம் வர வேண்டும் என நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பிணை உத்தரவாதம் ஏற்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் பாஸ்போர்டும் ஒப்படைக்கப்பட்டது.
வெளியே வந்த செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்து தீர்ப்பு வெளியான உடனே கரூரில் அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். என் ஆருயிர் சகோதரரே வருக வருக என தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
471 நாட்கள் சிறை வாசம் முடித்து ஜாமீனில் வெளியே வரும் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுக தொண்டர்கள் புழல் சிறை முன் குவிந்துள்ளதால் சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் மலர் தூவி பொன்னாடை போர்த்தி திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய்வழக்கில் இருந்து சட்டப் போராட்டம் நடத்தி மீண்டு வருவேன் என பேசினார்.