ஐ. நா பொதுக் கூட்டத்தில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா : நடந்தது என்ன?

india pakistan imrankhan snehadubey
By Irumporai Sep 25, 2021 08:34 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய நிலையில், இந்தியா அதற்கு தக்க பதிலடிக் கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், "தங்கள் நாடு இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புகிறது.

அதே நேரம் காஷ்மீர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பது மூலமே தெற்காசியாவில் அமைதியை நிலவச் செய்ய முடியும்" என்றார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பதிலடி கொடுத்த ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதியும், செயலாளருமான ஸ்னேகா துபே,

"ஒரு கட்டடத்திற்கு தீ வைத்து விட்டு அத்தீயை அணைக்க முற்படுவது போல பாகிஸ்தான் செயல் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வளர்த்துவிட்டுள்ளது; இதனால் உலகமே ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.

உலக அரங்கில் பொய்யைப் பரப்பும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் கடமை இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீரும், லடாக்கும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் தான். உலகையே அதிரவைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான் தான் என்பதை எந்தவொரு நாடும் மறக்காது.

அப்படிப்பட்ட நபரைப் பாகிஸ்தான் தியாகி போலச் சித்தரிக்கிறது. அமைதியை மீட்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை" எனத் தெரிவித்தார்.