பாம்பு இருக்கிறது! ஆபத்திலிருந்து மீட்ட துண்டுச்சீட்டு
தமிழகத்தின் திருச்சி நீதிமன்றத்தில், நபர் ஒருவர் பாம்பு இருப்பதாக துண்டு சீட்டில் எழுதிவைத்து பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.
திருச்சியை சேர்ந்தவர் கணபதி, வழக்கறிஞர். தினமும் நீதிமன்றத்துக்கு செல்வது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் காலை 9.30 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கட்டிடம் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
இரண்டு மணிநேரம் கழித்து கணபதியின் ஜூனியர் வந்துள்ளார், அவரிடம் உங்கள் வாகனத்தில் ஒரு துண்டுச்சீட்டு உள்ளது, அதில் ”வாகனத்தில் பாம்பு இருப்பதாக” எழுதியுள்ளது என கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு கணபதி அதிர்ச்சியடைய உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார், அவர்கள் வந்து சோதனையிட்ட போது அதில் பாம்பு இல்லை.
இருந்தாலும் வாகனத்தின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி பார்த்ததில் இன்டிகேட்டருக்கு பின்னால் சிறிய சாரைப்பாம்பு இருந்தது. அதனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் பையில் போட்டு கொண்டு சென்றனர்.
நீதிமன்றத்துக்கு வந்த யாரோ ஒருவர் செய்த செயலால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குறித்த துண்டுச்சீட்டில், வண்டியின் எண், நேரம் எழுதியிருந்ததும் காகிதம் பறக்காமல் இருக்க கல்லையும் வைத்து விட்டு சென்றுள்ளார்.
இப்படியும் உதவலாம், மனிதநேயம் இன்னும் வாழ்கிறது என கமெண்டுகள் குவிந்து வருகின்றன.