ஓடி உதவிய பிரபல பாம்புபிடி வீரர் சந்தோஷ் - எதிர்பாராத விதமாக நேர்ந்த துயரம்!
பாம்பு கடித்ததால், பாம்பு பிடி வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு பிடி வீரர் சந்தோஷ்
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக பிடித்து, வனப்பகுதியில் விடும் பணியை செய்து வந்தார்.
ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவித்துள்ளார். இந்நிலையில், தொண்டாமுத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நல்லபாம்பு ஒன்று இருப்பதாக இவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பாம்பு கடித்து பலி
அதன் அடிப்படையில், சந்தோஷ், அங்கிருந்த பாம்பை பிடிக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.