பாம்பு கடித்த சம்பவத்தை வரிவரியாக சொன்ன சல்மான்கான் - அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்
சல்மான்கானை பாம்பு கடித்த தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அது விஷமற்ற பாம்பு என்று தெரியவந்ததையடுத்து, ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தனது பிறந்தநாளுக்கு முன்னதாக, சல்மான் கான் தனது பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றார்.
அங்கு அவரை விஷமற்ற பாம்பு கடித்து விட்டது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை நடந்துள்ளது. சல்மான் கான் உடனே காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, நேற்று காலை 9 மணிக்கே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டவுடன், சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில், பாம்பு கடித்த சம்பவம் குறித்தும், என்ன நடந்தது என்றும் சல்மான்கான் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது அவர் பேசியதாவது -
பாம்பு கடித்த சம்பவம் என் அப்பாவுக்கு தெரிந்தவுடன், உடனே அவர் எனக்கு போன் செய்தார். நான் உயிரோடு இருக்கிறேன் என்றேன். பாம்பு உயிரோடு இருக்கிறதா என்று கேட்டார். பாம்பை அடித்தீர்களா என்று என் தந்தை கேட்டார்.
நாங்கள் எதுவும் காயப்படுத்தவில்லை. அந்த பாம்பை காட்டுக்குள் விட்டுவிட்டோம் என்றேன். பாம்பு அறைக்குள் வந்ததும் நான் ஒரு நீண்ட குச்சியை எடுத்து தூக்கி வெளியே போட்டுவிடலாம் என்று நினைத்தேன்.
என்னிடம் சிறிய குச்சிதான் இருந்தது. அதை வைத்து அந்த பாம்பை தூக்கினேன். அந்த பாம்பு அந்த குச்சி வழியாக சரசரவென மேலேறி என் கையருகே வந்துவிட்டது.
பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் பாம்பு.. பாம்பு என கூச்சலிட்டார்கள். அந்த பாம்பு என்னை ஒருமுறை கடித்தது. மறுபடி அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிட்டல்.. ஹாஸ்பிட்டல் என கூச்சல் போட்டார்கள். பாம்பு மீண்டு கடித்துவிட்டது.
உடனடியாக மருத்துவமனை விரைந்து வந்துவிட்டோம். அது விஷப்பாம்பு இல்லை என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பும் பயந்து இருந்தது. அதனால் தான் என்னைக் கடித்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.