103 டிகிரி காய்ச்சல்..ஓய்வில்லாமல் விளையாடி கோப்பை வென்ற ஸ்மிரிதி மந்தனா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, காய்ச்சலை பொருட்படுத்தாமல் விளையாடி கோப்பை வென்றதாக தெரிய வந்துள்ளது.
ஸ்மிரிதி மந்தனா
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.

முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 19.4 ஓவர்களில் இலக்கினை எட்டி மகுடம் சூடியது.

கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்ததன் மூலம் ஆட்டநாயகி விருது பெற்றார். ஆனால் அவர் போட்டிக்கு முந்தைய இரவு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
காய்ச்சல் மற்றும் ஃப்ளூ பாதிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, ஸ்மிரிதி மந்தனா கடுமையான காய்ச்சல் மற்றும் ஃப்ளூ பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக அவர் ஓய்வெடுக்காமல் விளையாடத் தீர்மானித்தார். அவர் தனது உடல்நலக்குறைவையும் மீறி விளையாடி 87 ரன்கள் விளாசி, சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பெங்களூரு அணி WPL கோப்பையை வெல்ல, பிரபங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
