“அம்மா, என் கன்னத்துல ஒரே அறை குடுப்பாங்க ..அதோட எல்லாம் தெளிவாயிடும்” - நெட்டிசன்களை உற்சாகப்படுத்திய ஸ்மிரிதி இராணி போஸ்ட்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாரிய அமைச்சர் ஸ்மிருதி இராணி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று நெட்டிசன்களை உற்சாகப்படுத்தி ஆரவாரப்படுத்தி வருகிறது.
நேற்றிரவு ஸ்மிருதி இராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் அவர், “என் அம்மா எனக்கொரு புகைப்படத்தை அனுப்பியிருந்தார். அதை நான் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஸ்மிருதி இராணி பகிர்ந்திருந்த அந்தப் புகைப்படத்தில், நான் குழந்தையாக இருந்தபோது, என்னை யாரும் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லவில்லை.
என் அம்மாவால் எனது சக்கரத்தைத் திறந்து எனது கர்மாவை சீராக்கி என்னைச் சுற்றி சுத்தமான ஒளியை உருவாக்க முடிந்தது. கன்னத்தில் விடும் ஒரே ஒரு அறையில் அவர் இதை செய்துவிடுவார் என்று எழுதியிருந்தது.
அந்தப் புகைப்படத்தின் தலைப்பில் ஸ்மிருதி இராணி, என் அம்மா மகிழ்ச்சியுடன் இதை எனக்கு அனுப்பியிருந்தார்.
இங்கே வேறு யாரும் இதே போல் அவர்களின் ஆன்மா அம்மாவால் சுத்தப்படுத்தப்பட்ட அனுபவம் இருந்தால் கையை உயர்த்தவும் என்று கூறியிருந்தார்.
இந்தப் பதிவு பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே லைக்ஸ், கமென்ட்ஸை அள்ளியது. ஸ்மிருதியில் இன்ஸ்டா பதிவுக்கு ரியாக்ட் செய்த அனுபம் கேர், என் அம்மாவும் இதைத் தான் இன்று வரை செய்கிறார் எனப் பதிவிட்டிருந்தார்.