அயோத்தியைப் போல் பிரம்மாண்டமான சீதை கோயில் - எங்கே தெரியுமா?
அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் சீதைக்கு பிரம்மாண்ட கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீதைக்கு கோவில்
பீகாரில் சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. இங்கு சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது.
தொடர்ந்து கோயில் புனரமைப்புக்காக முதல்கட்டமாக, ரூ.120 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் பிரம்மாண்டமாகக் கட்ட முடிவு செய்துள்ளனர்.
அரசு முடிவு
இதன் புதிய வடிவமைப்பின் படங்களை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டார். மேலும், அதை பாராட்டி அந்த படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘அன்னை ஜானகியின் பிறப்பிடமான புனவுரா தாம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அன்னை ஜானகியின் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டுவது பிஹார்வாசிகள் அனைவருக்கும் பெருமை மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயம்.
இந்த அன்னை சீதா கோயிலைக் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார். புனவுரா தாம் பல பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பாட்னா விமான நிலையத்திலிருந்து சுமார் 150 கி. மீட்டலிரும் முசாபர்பூர் ரயில் நிலையத்திலிருந்து 70 கி.மீட்டரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.