பாடகர் கேகே-வின் மரணம் இயற்கைக்கு மாறானது இல்லை: மருத்துவ அறிக்கையில் தகவல்!
பிரபல பாடகரான கிருஷ்ண்க்குமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கேகே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகளை பகிர்ந்திருந்தார்.
53 வயதான பாடகர் கேகே தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டும் இவர் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதில் காதல் வளர்த்தேன், அப்படி போடு, காதலிக்கும் ஆசை இல்லை, நினைத்து நினைத்து பார்த்தேன், உயிரின் உயிரே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே, உள்ளிட்ட பாடல்களும் அடங்கும்.
இந்நிலையில் இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என கொல்கத்தா பூ மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டதில், அவரது மரணம் இயற்கைக்கு மாறானது அல்ல என்று முதல் கட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.