முன்னாள் கணவர் மீது பிரபல கானா பாடகி இசைவாணி புகார் - ரசிகர்கள் அதிர்ச்சி
தமது பெயரில் மோசடி செய்து வரும் முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரபல கானா பாடகி இசைவாணி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் கானா பாடல் மூலம் பிரபலமாகி பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார் இசைவாணி. இவர் அண்மையில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'பச்சை கல்லு மூக்குத்தி' பாடலை பாடி கவனம் பெற்றார். மேலும், தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருவராக பங்கேற்றார்.
இதனிடையே இசைவாணி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் இசைவாணி சதிஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் கணவரான சதிஷ் இசைவாணியின் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்டும், இசைவாணி தனது மனைவி என்றும் கூறி பல இசை கச்சேரிகளை நடத்தி வருவதாக இசைவாணிக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் இசைவாணியின் கணவர் என குறிப்பிட்டு, பல கணக்குகளை சதிஷ் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் கச்சேரிகளை புக் செய்து லாபம் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.