காரை மறித்து லிஃப்ட் கேட்ட இரு பெண்கள் - கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற காரை நிறுத்தி லிஃப்ட் கேட்ட இரு பெண்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த இரு பெண்கள் ஒருகட்டத்தில் சோர்வாகி அந்த பக்கமாக வந்த மினி கூப்பர் காரை நிறுத்தி லிஃப்ட் கேட்டுள்ளனர். அந்த காரும் உடனடியாக நிறுத்தப்பட்டு இருவரையும் உள்ளே வருமாறு காரை ஓட்டி வந்தவர் அழைத்துள்ளார்.
மகிழ்ச்சியில் உள்ளே உட்கார்ந்த பிறகு இருவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த காரை ஒட்டிக்கொண்டு வந்தது சுவிட்சர்லாந்தின் சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பு துறைகளின் அமைச்சர் சிமோனெட்டா சொம்மாருகா என்பது தான்.
பொதுவாக உயர் பதவியில் இருக்கும் தலைவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி வண்டியை நிறுத்தாமல் சென்றிருக்கலாம். ஆனால் சிமோனெட்டா மிகவும் மனிதாபிமானம் உள்ளவராக இருவரையும் அழைத்துச்சென்று அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்பெண்கள் அமைச்சர் சிமோனெட்டாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் எத்தனை அமைதியான நாடு எங்களிடம் இருக்கிறது, ஒரு நாட்டின் மிகப்பெரிய அமைச்சர் சாதாரண ஹிட்ச்ஹைக்கர்களை காரில் அழைத்துச் செல்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து சிமோனெட்டா சொம்மாருகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்துடன் சிமோனெட்டா ஒரு தகவலை எழுதியிருந்தார். அவர் அந்த பெண்களைப் பார்த்த தருணம் தான் மினி கூப்பரில் சாலையில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் வயதானவர் என்றும், இருவரும் பனிக்கட்டி உறைந்த சாலையில் நடந்து செல்வதைக் கண்டு உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அமைச்சரை பாராட்டி வருகின்றனர்.