என் மகனின் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் சதி செய்கின்றனர்- உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டு!
நடிகர் சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் சதி செய்வதாக அவரது தாயார் உஷா ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் முழுமையாக நடித்துக் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரை விசாரித்த அன்றைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிலம்பரசன் மைக்கேல் ராயப்பனுக்கு 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து நடிகர் சிம்பு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் சிம்பு நடித்து வரும் அடுத்த படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா சாலை உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள், சிம்பு தரப்பில் நேற்று, சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்க பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்: சிம்புவின் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் அவரது படங்களை தடை செய்ய நினைக்கின்றனர்.
சிலம்பரசன், மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது. திட்டமிட்டது போல வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறினார்.