இயற்கையின் பூரண அரவணைப்பான சிக்கிம் - சிறப்பும், சலுகைகளும்.!
சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலம். இதன் தலைநகர் கேங்டாக். 1947ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது.
சிக்கிம்
இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது.
நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து ஆதரித்ததில் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம்.
அரசியல்
அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்(குடியரசுத் தோழன்) என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. முப்பத்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவை தொகுதியும், ஒரு நாடாளுமன்ற இராச்சிய சபை தொகுதியும் உள்ளது.
நர் பகதூர் பண்டாரி
1975 முதல் தற்போது வரை ஐந்து பேர் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளனர். சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த காசி லீந்தப் டோர்ஜி என்பவர் பதவி வகித்தார். அதன் பின் சிக்கிம் சனதா பரிசத் கட்சியைச் சேர்ந்த நர் பகதூர் பண்டாரி முதலவரானார். இரு முறை ஆட்சி செய்ததில், 1984, 1989-1994 வரை பதவியில் இருந்தார். இதற்கிடையில் 2 முறை மாநிலம் குடியரசு ஆட்சியின் கீழ் செயல்பட்டது.
பவன் குமார் சாம்லிங்
அவரைத் தொடர்ந்து பவன் குமார் சாம்லிங் ஐந்தாவது முதலமைச்சராக பதவியேற்றார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. இவரே இம்மாநிலத்தின் நீண்டநாட்களாக பணியாற்றிய முதலமைச்சர். `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' என்னும் திட்டத்தை அறிவித்து, முதல் கட்டமாக 12,000 பேருக்கு வேலைக்கான உத்தரவை வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அவர் தகுதிக்கேற்றபடி அரசுப் பணி வழங்கப்பட்டது.
இதேபோல் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து யுபிஐ (UBI) எனப்படும் இலவச அடிப்படை மாத ஊதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஐ.நா பாராட்டு
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது இயற்கை விவசாயத்தில் சாம்லிங்கின் செயல்பாடுகள்தான். சிக்கிம் முழுமைக்கும் இயற்கை விவசாயம்தான் மேற்கொள்ளப்படுகிறது. விவசாய நிலங்களில் பெரும்பாலும் தானியங்கள் விளைவிக்கப்பட்டதால் காய்கறிகள் விளைச்சல் குறைவாக இருந்தது. மாநிலம் முழுவதுமுள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுத் தோட்டத்துக்கான இடுபொருள்களுக்குக் கடனுதவி வழங்கப்படும் என அறிவித்து, பெரும் பலனை அறுவடை செய்தார். ஐ.நா அமைப்பும் இந்த முயற்சிகளைத் தேடிவந்து பாராட்டியது.
பிரேம் சிங் தமாங்
2019 தேர்தலில் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 17-இல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதும், மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்றார்.
பிறப்பு விகிதம்
தொடர்ந்து, சிக்கிமில் 1998 – 99 காலகட்டத்தில் 2.75 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம் 2019 –20 காலகட்டத்தில் 1.1 சதவீதமாக சரிந்து உள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வு தெரிவித்தது. இதற்கு தீர்வு காணும் விதமாக முதற்கட்டமாக அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் அளிக்கப்படும் அவர்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
பசுமை
மேலும், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 100 மரக்கன்றுகள் நடவேண்டும் என புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஒரு குழந்தை இவ்வுலகிற்கு வந்ததை நினைவு கூறும் விதமாக, இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 100 மரக்கன்றுகளை நடுவது சாத்தியமா என்ற கேள்வியும் மக்களிடையே நிலவி வருகிறது.
வரி விலக்கு
இதுமட்டுமில்லாமல், இந்த மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வருமான வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரத்தின் பொழுது, பழைய சிக்கிம் அரசின் சட்டங்கள் அப்படியே தொடரும் என்கின்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதே அதற்கு காரணம். இந்த சலுகை அனைத்தும், பூர்வ குடிமக்களுக்கு மட்டும் தான். பான் கார்டும் தேவைப்படுவதில்லை.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வரப்போகும் தேர்தலில், சிக்கிமின் கதாநாயகனாக விளங்கும் சாம்லிங் 25 ஆண்டுகால வெற்றியை மீண்டும் பெறுவாரா எனப் பார்ப்போம்.. அரசியலில் இருந்து நான் ஓய்வுபெற மாட்டேன். அரசியல் என்பது நான் பேரார்வத்தோடு வந்தது எனத் தெரிவித்திருந்தார். தற்போது எதிர்க்கட்சியாக தொடரட்டும் அவரின் ஜனநாயகப்பணி...