சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து - நடிகர் சித்தார்த் ஆஜராக காவல்துறை சம்மன்

Police Chennai Notice Siddharth Saina nehwal
By Thahir Jan 21, 2022 04:03 AM GMT
Report

கொரோனா அதிகரிப்பு சூழலில் நடிகர் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப் படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார். 

இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்தது.

சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. 

ஜதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்.

இதற்கு பதிலளித்த சாய்னா, சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சியளிக்கிறது.  பெண்களை நீங்கள் இவ்வாறு குறி வைக்கக்கூடாது. பரவாயில்லை.

நான் இதுபற்றி கவலை கொள்ளவில்லை. நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றார்.

இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்ளிடம் அவர் பேசியதாவது:   இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதில் ஒன்று கிரிமினல் வழக்கு அல்ல. அவதூறு வழக்கு உள்ளது.

சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. எங்களுக்கு அவரது அறிக்கை மட்டுமே தேவை. கொரோனா அதிகரிப்பால் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.