‘என்னை மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு?’ - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி!
என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காட்டமாக பேசியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சர்ச்சை பூதாகரமாக வெடித்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்தில் தீர்வு காண நீதிமன்றம் வரை எடுத்து செல்லப்பட்டது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து அங்கு இந்து கோவில்கள் அருகே இஸ்லாமிய கடைகள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி விற்கப்படுவதாக கூறி இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கவேண்டும் என்ற மற்றொரு சர்ச்சை எழுந்தது.
அதுபோல பல பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இது குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, “நான் ஒரு இந்து, இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. ஆனால் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்.
என்னை மாட்டுக்கறி உண்ணக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மாட்டுக்கறியை உண்பதில்லை. இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட உண்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.