இறால் பண்ணைகளை தடை செய்யவில்லையென்றால், தேர்தலை புறக்கணிப்போம் - மீனவர்கள் போராட்டம்!
மயிலாடுதுறையில் சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்கு மடி வலையை அனுமதிக்கக் கோரியும், இறால் பண்ணையை தடை செய்யக் கோரியும் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனையொட்டி மீனவர்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இத்தேர்தலை புறக்கணிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சந்திரபாடி மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலையை பயன்படுத்தும் மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது. அந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்யபோவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 15 ஆண்டுகளாக 9 இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்கள்.
குடிநீர் பிரச்சனையால் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று தண்ணீர் வாங்கி உபயோகித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படும் நிலையில் தமிழக அரசு மீனவர்ளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் தடை செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதனால் சுமார் 100 விசைபடகுககள், 500 பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுருக்குமடிவலை பயன்படுத்த அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இறால் பண்ணைகளை தடை செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.