தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்படலாம் : ஆனால் சில நிபந்தனைகள்
தமிழகத்தில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் கடைகள்:
மத்திய அரசானது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒழுங்கு முறை சட்ட மசோதா, 2016ல், இறுதி செய்யப்பட்டது. இந்தச் சட்டப்படி, சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆண்டு முழுவதும், தினமும், 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளித்தது.

இந்த சட்ட மசோதாவில் உள்ளபடியோ அல்லது அந்தந்த மாநில நடைமுறை தேவைகளின்படி, விதிகளில் மாற்றம் செய்தோ, சட்டத்தை அமல்படுத்தலாம் என, மத்திய அரசு அறிவித்திருந்த்து.
தடையான கொரோனா :
அதன்படி, தமிழகத்தில், 2019 முதல் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க, அனைத்து கடைகளும், 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கலாம் என, தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலர், அரசுக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்த அரசு, சில விதிமுறைகளுடன், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில் 2019 இறுதியில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் , தற்போது 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களை கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளதுஇந்த உத்தரவு வரும் 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்:
24 மணி நேரமும் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.
ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையில் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48 மணி நேரத்திற்கு மேல் யாரையும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும். இரவு 8:00 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.
பெண்கள் பணியாற்ற வேண்டிய இருந்தால் எழுத்துபூர்வமாக சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.
தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
பணியிடங்களில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு குழுவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.