பேச மறுத்த காதலியை கத்தியால் கழுத்தை அறுத்த காதலன் - மனசு தாங்காமல் காதலன் தற்கொலை முயற்சி..!
தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூர் அருகே காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேச மறுத்த காதலி
திருச்செந்தூர் அருகே, N.முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த வன சந்தியாவும், ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சந்தியாவின் வீட்டிற்கு தெரியவந்தது.
இதனையடுத்து சந்தியாவை தந்தை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், சந்தியா, கார்த்திகிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். சந்தியாவை பார்க்காமல், பேசாமல் கார்த்திக்கால் இருக்க முடியவில்லை.
கழுத்தை அறுத்த காதலன்
இதனையடுத்து, சந்தியாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கார்த்திக் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சந்தியாவிடம் பேசும்போது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது, சந்தியா ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சந்தியாவை மீட்ட அக்கம், பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்கொலை முயற்சி
வீட்டிற்கு வந்த கார்த்திக், காதலியின் கழுத்தை அறுத்துவிட்டோமே என்று மனசு தாங்காமல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். கார்த்திக்கை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.