ஷாக் அடித்த கரண்ட் பில் - 520 யூனிட்டுக்கு ரூ.12 லட்சம் கட்டணம்
புதுச்சேரியில் வாட்ச் மேன் வேலை செய்யும் நபரின் வீட்டுக்கு 12 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஷாக் அடித்த கரண்ட் பில்
புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை திருவள்ளூர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் 57 வயதான இவர் பகலில் டிவி மெக்கானிக் வேலையும், இரவில் வாட்ச் மேனாகவும் பணியாற்றி வருகிறார்.
இவரின் வீட்டிற்கு மின் கட்டணமாக மாதம் 800 ரூபாய் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக மின்சாரத்துறையை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இரண்டு மாதமாக மீட்டர் ரீடிங் எடுக்கப்படவில்லை.
புதுச்சேரி முழுவதும் 2 மாதங்களுக்கு சேர்த்து பில் வர மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மின் கட்டண ஊழியர்கள், சரவணன் வீட்டிற்கு வந்து மின் கட்டணமாக 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் கட்ட வேண்டும் என பில் கொடுத்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரவணன், முத்தியால்பேட்டை மின் அலுவலகத்தில் சென்று முறையிட்டார். மீட்டர் ரீடிங் செய்யும் போது ஒரு பூஜ்ஜியம் கூடுதலாக சேர்ந்து விட்டதாக மின் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை மீட்டர் 20630 இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21115 ஆக வந்துள்ளது. ஆனால், மின் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், 211150 என்று தவறுதலாக பதிவு செய்யப்பட்டதால் சரவணனுக்கு 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என என வந்துள்ளது.