வாட்ஸ்அப் செயலியில் மனைவியின் புகைப்படத்தை வைத்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சென்னையில் வாட்ஸ்அப் செயலியில் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நந்தகுமார் என்பவர் சொந்தமாக இரு சக்கர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வாட்ஸ்ஆப் டீபியில் தனது மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்தார்.
இதனை அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அந்த போட்டோவை எடுத்து ஒரு நிர்வாண ஆணுடன் இருப்பது போன்று மார்பிங் செய்துள்ளார். மேலும் நந்தகுமார் மனைவியின் முகத்தையும் மாற்றி மார்பிங் செய்து பல்வேறு ஆபாச புகைப்படங்களையும் உருவாக்கியுள்ளார்.
இந்த ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப் மூலம் மர்மநபர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நந்தகுமார் மர்மநபருக்கு போன் செய்த நிலையில் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் குறிப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஜிபேயில் பணம் அனுப்பும் படி கேட்டுள்ளார்.
மேலும் பணம் தராமல் நம்பரை பிளாக் செய்தால் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் நந்தகுமார் மற்றும் அவரது மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அயனாவரம் காவல்நிலையத்தில் தம்பதி இருவரும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அயனாவரம் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்மநபரை தேடி வருகின்றனர்.