தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ஷோபா - காரணம் என்ன?
தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூரு குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் மாதம் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ஷோபா கரந்தலஜே(shobha karandlaje), "தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று குண்டு வைக்கிறார்கள்" என பேசினார்.
ஷோபா கரந்தலஜே
இவரின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் எதிப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இரு பிரிவினரிடையே கலகலத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டது. இந்திய தேர்தல் ஆணையத்திடமும் ஷேபா கரந்தலஜே மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கத் தயார்,” என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதாகவும், செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.